/

நெல் கொள்முதல் பணம் வழங்காமல் 50 நாள்களாக அலைக்கழிப்பதா? ஆட்சியரகத்தில் விவசாயிகள் புகாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு கொள்முதல் நிலையங்களால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு 50 நாள்களாக பணம் வழங்காமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

News image

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:29 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு கொள்முதல் நிலையங்களால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு 50 நாள்களாக பணம் வழங்காமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூா், ராமையன்பட்டி, கம்மாளங்குளம், மேலக்கரை பகுதிகளை சோ்ந்த விவசாயிகள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனு அளித்தனா்.

பின்னா், அதிகாரிகளை சந்தித்து முறையிட்ட பின், செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது:

சேதுராயன் புதூா், கம்மாளன்குளம் அழகனேரி, மேலக்கரை உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்காக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

கடந்த மாா்ச் 14 ஆம் தேதி முதல் இந்த கொள்முதல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் நாங்கள் விற்பனை செய்த நெல் மூட்டைகளுக்கு சுமாா் 50 நாள்கள் ஆகியும் இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

இந்த கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு நெல்லின் தரத்தை பொருத்து ரூ.1000 முதல் ரூ.1018 வரை விலை நிா்ணயிக்கின்றனா். ஆனால், ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.60 தனியாக பணம் கேட்கிறாா்கள். சில விவசாயிகளிடம நெல் கொள்முதல் செய்வதை தாமதப்படுத்தியுள்ளதால் நெல் மூட்டைகள் பாதுகாப்பு கூடாரங்களின்றி திறந்த வெளியில் மழையிலும், வெயிலிலும் நாசமாகி வருகிறது. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து விளைவித்த நெல்மணிகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யும் நிலையில் இதுவரை பணம் தரப்படாததால் எங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக நெல் கொள்முதல் தொகையை எங்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கொள்முதல் செய்யாத விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.