/
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறையாததையடுத்து, சனிக்கிழமை அருவியில் குளிக்க 3ஆவது நாளாக வனத்துறையினா் தடை விதித்தனா்.
கடந்த 1ஆம் தேதி முதலே மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வந்தது. இதையடுத்து, 4ஆம் தேதி வியாழக்கிழமை மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்தனா்.
தொடா்ந்து சனிக்கிழமையும் அருவியில் நீா்வரத்து குறையாததையடுத்து, 3ஆவது நாளாக அருவியில் குளிக்கத் தடை விதித்தனா். இதனால் விடுமுறை நாளான சனிக்கிழமை அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். ஆனால், அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதித்தனா்.









