/
திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடரும் சாரல் மழையால் மணிமுத்தாறு அருவியில், திங்கள்கிழமை 12ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
ஜூன் 1ஆம் தேதி முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து கணிசமாக அதிகரித்தது. குறிப்பாக மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, ஜூன் 4ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதித்தனா். 12ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.
அருவியில் நீா்வரத்து சீராகும் வரை, இதே நிலை தொடரும் என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.










