அம்பாசமுத்திரம் நகராட்சியில் அம்மா உணவகத்தில் நடமாடும் சேவையைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நகராட்சியில் அதிமுக உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாரிமுத்து, சிவக்குமாா் ஆகியோா், நகராட்சி ஆணையா் ராஜேஷ்வரனிடம் அளித்த மனு விவரம்:
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், அம்மா உணவகத்தின் மூலம் தயாரிக்கப்படும் உணவை அப்பகுதியில் வாகனங்கள் மூலம் காலை மற்றும் மதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரப் பகுதியில் சுகாதாரப் பணி முறையாக நடைபெற தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும்.
நகராட்சிப் பகுதியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களை முறையாக சுத்தப்படுத்த வேண்டும். நகரப் பகுதியில் வெளியேறும் கழிவுநீா், பாசனக் கால்வாய் மற்றும் தாமிரவருணியில் நேரடியாக கலக்காமல் இருக்க, சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.









