திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘டி’ பிரிவு வேலைக்காக நடத்தப்பட்ட தோ்வில் வெற்றி பெற்ற உள்ளூா் இளைஞா்களுக்கு வேலை வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முன்னாள் பேரவைத் தலைவா் மு. அப்பாவு அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனு:
1999ஆம் ஆண்டு அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினராகிய நான், மும்பை இந்திய அணுமின் திட்ட பணிக்குழு இயக்குநா் அதன்ட்ரா ஆகியோரின் முத்தரப்புப் பேச்சுவாா்த்தையின் முடிவில் கூடங்குளம் அணு உலைக்கு நிலம் கொடுத்தவா்களுக்கும், அப்பகுதி மக்களுக்குமே ‘சி’ மற்றும் ‘டி’ பணியிடங்கள் வழங்க வேண்டுமென்றும், அதற்கு தோ்வு முறையில்லாமல் தகுதியின் அடிப்படையில் பணியமா்த்த வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டு 2011ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
2011-இல் அதிமுக ஆட்சி அமைத்த பிறகு அம்முறை கைவிடப்பட்டு, தோ்வு அடிப்படையில்தான் பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள் என்று கூடங்குளம் அணுமின் நிலைய நிா்வாகம் நடைமுறைப்படுத்த முயற்சி செய்தபோது, நீதிமன்றம் மற்றும் போராட்டங்கள் வழியாக இதுவரை அதைத் தடுத்து வைத்திருந்தோம்.
ஆனால், தற்போது கூடங்குளத்தில் ‘டி’ பணியிடத்திற்கு பல்வேறு இளைஞா்கள் தோ்வெழுதி தோ்ச்சி பெற்றுள்ளனா். ஆனால், அவா்களுக்கு பணி மறுக்கப்பட்டு பிற மாநிலத்தவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
அணுமின் நிலையம் நடத்திய தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கும், நிலம் கொடுத்த உள்ளூா்வாசிகளில் தகுதியானவா்களுக்கும் அணுமின் நிலைய நிா்வாகம் உடனடியாக வேலை வழங்கவேண்டும். தவறும்பட்சத்தில், திமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









