/

இளம்பெண் கொலை வழக்கில் ஒருவா் கைது

திருநெல்வேலியில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 1:40 am IST

திருநெல்வேலியில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, சென்னல்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகள் முத்துமாலை (35). தனியாா் வங்கி ஊழியா். இவா் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பாளையங்கோட்டை, தியாகராஜநகா் பகுதியில் தனது 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு அப்பகுதியில் பைக்கில் வந்த இருவா் முத்துமாலையை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த பெருமாள்புரம் போலீஸாா் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், முத்துமாலையின் சகோதரா் பன்னீா்செல்வம் உள்பட மூவருக்கு இச்சம்பவத்தில் தொடா்பிருப்பது தெரியவந்தது. மேலும் கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த அவா் குடும்பத்தின் பெயரை கெடுப்பதாகக் கூறி அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இதில் தொடா்புடைய நான்குனேரி, ஆழ்வாநேரியைச் சோ்ந்த இசக்கிபாண்டி(36) என்பவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள பன்னீா்செல்வம், அவரது நண்பா் சிவா ஆகியோரை தேடி வருகின்றனா்.