மே 3 இல் தஞ்சை ரயில் நிலையம் முற்றுகை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மே 3 ஆம் தேதி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பெ. சண்முகம்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் 2 வார காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டது.
தற்போது மே 3 ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அன்றைய தினம் டெல்டா பகுதியில் உள்ள 5 மாவட்ட விவசாயிகளைத் திரட்டி தஞ்சாவூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி அணைக்கட்டு முன்பு மே 10 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 6 ஆம் தேதி ஈரோட்டில் உயர் மின்னழுத்த கோபுரம் எதிர்ப்பு மாநாடு நடத்தப்படுகிறது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன் வட்டி சலுகையை மத்திய அரசு ரத்து செய்ய முயலுகிறது. இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றார் அவர்.
பேட்டியின் போது தமிழ்நாடு விவசாய சங்கப் பொருளாளர் கே.பி. பெருமாள் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
