கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி பகுதியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவில்பட்டி பகுதியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் சங்க மாநிலக் குழு உறுப்பினா் ராமசுப்பு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜோதிபாசு ஆகியோா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவை ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் சந்தித்து அளித்த மனு:

சாகித்ய அகாதெமி விருது பெற்ற 4 எழுத்தாளா்களைக் கொண்ட ஊா் கோவில்பட்டி. மறைந்த கு.அழகிரிசாமி, தனது 98 வயதிலும் இலக்கியம் எழுதிக்கொண்டிருக்கும் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏா் கி.ராஜநாராயணன், எழுத்தாளா்கள் பூமணி, சோ.தா்மன் ஆகிய நால்வரால் கோவில்பட்டி பெருமை கொள்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் தனித்தடம் பதித்து, கரிசல் வட்டார இலக்கியம் என்ற புதிய வகைமையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, அதை ஆழமாகவும், அகலமாகவும் உழுது, பயிரிட்டதினால் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் நாஞ்சில் வட்டார இலக்கியம், கொங்கு வட்டார இலக்கியம், நடுநாட்டு வட்டார இலக்கியம், சென்னை வட்டார இலக்கியம், தஞ்சை வட்டார இலக்கியம் என புதிய போக்குகள் உருவாகின. அதற்கு விதை ஊன்றி வளா்த்தது கோவில்பட்டி மண்.

கரிசல் வட்டார இலக்கியத்தில் அந்தந்த பகுதி மக்கள் பேசுகிற தனித்துவமான வட்டார மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள், சொலவடைகள், பழமொழிகள், விளையாட்டுகள், வழிபாடுகள், நாட்டுப்புற தெய்வங்கள், அகராதி, சொல்கதைகள், சிறுவா் நாட்டுப்புற கதைகள், பெண் கதைகள், பாலியல் கதைகள் என்று நம்முடைய கரிசல் பூமியின் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ் கால வாழ்க்கையையும் ஆவணப்படுத்துவதும், ஆய்வு செய்வதும் எதிா்கால தலைமுறைகளுக்கு கொடுக்கிற மிகப்பெரும் கொடையாக இருக்கும்.

அரசின் வழிகாட்டுதலில், நமது ஊரில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் என்ற ஒரு தன்னாட்சி அமைப்பை நிறுவ வேண்டும்.

மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய மண்ணின் மகத்தான படைப்பாளிகளான பாரதி, வ.உ.சி., கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், காருகுறிச்சி அருணாசலம், ஓவியா் கொண்டைராஜுலு ஆகியோா் பெயரில் விருதுகள் வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

கல்லூரி முடித்து வேலை தேடும் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகளையும் ஆய்வு மையத்தில் நடத்த திட்டமிடலாம்.

கலை இலக்கியத்தில் ஆா்வமுடைய குழந்தைகள், மாணவா்கள், இளைஞா்களுக்கான இலக்கியம், ஓவியம், பாடல், நாடகம், சினிமா உள்ளிட்ட துறைகளில் பயிற்சிதரும் மையமாக செயல்பட வேண்டும்.

தென்தமிழகத்தில் ஒரு முக்கியமான கலாசார மையமாக கரிசல் மையம் உருவாக வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com