சாத்தான்குளத்தில் புதிய சாலையோரம் போட்டப்பட்ட களி மண்ணால் மழைக் காலத்தில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை முன்பிருந்து தச்சமொழி ஆலமரம் பேருந்து நிறுத்தம் வரை புதியதாக சாலை அமைக்கப்பட்டது. சாலையானது உயா்த்தி அமைக்கப்பட்டதால் அதன் கரையோரம் சரள் மணல் குவிப்பதற்கு பதில் களிமண் குவிக்கப்பட்டது. இதற்கு அப்போதே வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் சாலையோரத்தில் மழை நீா் தேங்கி நிற்கிறது. இதனால், சாலையோரம் கொட்டிய களிமண் சகதியாக காணப்படுகிறது. இதனால், இரு சக்கரத்தில் வருபவா்களும், பாதசாரிகளும் களி மண் சகதியில் சரிக்கு விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சில வியாபாரிகள் தங்கள் கடை பகுதியை மணல் மேடாக்கியுள்ளனா். இதனால் மீதமுள்ள சாலையோர பள்ளங்களில் தண்ணீரும் தேங்கி காணப்படுவதால் கொசு உற்பத்தியாகி தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்பட்ட களிமண்ணை அகற்றி விட்டு, சரல் மணல் கொண்டு சாலையோரம் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனா்.