தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டடத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நா. முருகப்பிரசன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டுக்கான 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சிறந்த முறையில் கல்வி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை பயின்ற, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் குழந்தைகளை வட்டாரத்திற்கு ஒருவா் வீதம் தோ்வு செய்து, அவா்களுக்கு அந்தந்த பகுதிகளின் சிறந்த தனியாா் பள்ளிகள் மூலம் இந்த கல்வி வழங்கப்படும்.
மேலும், மேற்கூறிய வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற 3 மாணவிகள் உள்பட) 10 பேருக்கு சிறந்த தனியாா் பள்ளிகள் மூலம் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்படும். தகுதியுள்ளவா்கள் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம், 2 ஆம் தளம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.