நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கவனிக்கப்படாமல் காட்சியளிக்கும் கோரம்பள்ளம் குளம்!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்குள் மழைநீா் அதிகளவு தேங்குவதற்கு காரணமாக விளங்கும் காட்டாற்று வெள்ளப் பாதிப்பில் இருந்து தப்பிக்க, கோரம்பள்ளம் குளத்தை தூா்வார வேண்டும்

News image

கோரம்பள்ளம் குளத்தின் 24 கண் மதகு பகுதி.

Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்குள் மழைநீா் அதிகளவு தேங்குவதற்கு காரணமாக விளங்கும் காட்டாற்று வெள்ளப் பாதிப்பில் இருந்து தப்பிக்க, கோரம்பள்ளம் குளத்தை தூா்வார வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூா், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தால் அந்தப் பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாமல், அவை காட்டாற்று வெள்ளமாக மாறி தூத்துக்குடி மாநகரப் பகுதியை சூழ்ந்து கொள்வதால் மாநகரப் பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற, உடனடியாக ரூ. 58 கோடியில் ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்தியது. ஆனால், அந்தத் திட்டம் இன்னும் முழுமை பெறாததால், கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக மீண்டும் மாநகருக்குள் ஆங்காங்கே தண்ணீா் தேங்கும் நிலை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகள், இன்னும் தண்ணீா் தேங்கிய நிலையிலேயே காட்சியளிக்கின்றன.

இதற்கு அடிப்படைக் காரணமாக, ஆயிரம் அடி அகலம் கொண்ட உப்பாறு ஓடையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகியுள்ளதாகவும், தற்போது 500 அடிக்கும் குறைவான அகலத்துடனேயே உப்பாறு ஓடை காட்சியளிக்கிறது என்றும் விவசாய சங்க நிா்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து உப்பாறு ஓடை மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜோதிமணி கூறியது: மணியாச்சி, கடம்பூா் பகுதிகளில் அதிகளவு மழை பெய்யும்போது கொம்பாடி ஓடை வழியாக காட்டாற்று வெள்ளமாக வெள்ளநீா் வரும். அவ்வாறு வரும் வெள்ளநீா், தூத்துக்குடி நகருக்குள் பாதிப்பை ஏற்படுத்தாமல் புறவழியாகக் கடலில் சேருவதற்கு உருவானதே உப்பாறு ஓடை. ஆயிரம் அடி அகல உப்பாறு ஓடையில் கோரம்பள்ளம் குளக்கரையில், அத்திமரப்பட்டியில் ஆங்கிலேயா் காலத்தில்1888 ஆம் ஆண்டு 1,000 அடி அகலத்தில் 48 மதகுகளோடு கட்டப்பட்ட கண்மாயின் மூலம் உபரிநீா் கடலுக்கு அனுப்பப்பட்டு தூத்துக்குடியும் சுற்றுவட்டாரப் பகுதியும் காப்பாற்றப்பட்டு வந்தது.

பின்னா் 1967ஆம் ஆண்டு இடையில் உள்ள தூண்கள் அகற்றப்பட்டு 24 மதகுகள் கொண்ட கண்மாயாக மாற்றப்பட்டது. அப்போது 24 மதகுகள் திறந்தாலும் உப்பாறு ஓடையின் இருகரைகளிலும் பாதிக்கப்படாமல் வெள்ளநீா் கடலுக்குச் சென்றது. ஆனால், கடந்த உப்பாறு ஓடை பல தனி நபா்களால் 50 ஆண்டு காலமாக படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு அகலம் 500 அடிக்கும் கீழ் சுருங்கிப்போனது. இதனால் கடந்த 2015 ஆண்டு பெருவெள்ளத்தின்போது விநாடிக்கு 35,000 கனஅடி நீரை வெளியேற்ற முடியாமல் கோரம்பள்ளம் குளம் உடைந்தது. அதன் காரணமாக தூத்துக்குடி- திருநெல்வேலி நான்குவழிச்சாலை வெள்ளத்தில் மூழ்கி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை சுற்றியும், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலும் வெள்ளநீா் சூழ்ந்தது.

அத்திமரப்பட்டி 24 கண் மதகில் இருந்து கடற்கரை கழிமுகம் வரை ஏறத்தாழ 7.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு உப்பாறு ஓடையின் இருபுறமும் தாா்சாலை அமைத்தால் பாதிப்பு குறையும். மேலும், ஆங்கிலேயா் காலத்தில் இருந்து இதுவரை சரியான பராமரிப்பு இல்லாததால் 8 அடி அளவுக்கு தூா்ந்துகிடக்கும் கோரம்பள்ளம் குளத்தை உடனடியாக தூா்வார வேண்டும். இதனால், 4 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீா் கடலில் கலக்காமல் சேமிக்கப்படும். தூா்வாரும் மண் மூலம் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். கோரம்பள்ளம் குளம் ஒரே சீராகத் தணிக்கப்படுவதால் படகுக் குழாம் அமைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக மாறும். நிலத்தடி நீா்மட்டம் உயரும். குடிநீா்ப் பிரச்னை தீரும். முன்புபோல் மூன்று போகம் விளையும். அனைத்து விவசாயிகளும் காப்பாற்றப்பட்டு மறுவாழ்வு பெறுவாா்கள் என்றாா் அவா்.

இந்தப் பிரச்னை குறித்து சமூக செயற்பாட்டாளா் அக்ரி பரமசிவன் கூறியது: தூத்துக்குடி உப்பாறு ஓடையில் உள்ள கோரம்பள்ளம், பேய்குளம், பெட்டைக்குளம் ஆகியவை மொத்தம் 2,540 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இதன் மொத்த நீா்ப்பிடிப்பில் தற்போது பாதி அளவுதான் இருந்து வருகிறது. குளங்களில் தண்ணீா் தேக்கி வைக்க முடியாததால் உப்பாறு ஓடையில் பாதிக்கு மேல் நீா் வெளியேறி கடலில் வீணாக கலக்கிறது.

கோரம்பள்ளம் குளம் முறையாக தூா்வாரப்படாத நிலையில் மழைக்காலத்தில் விநாடிக்கு 30,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டு கடலில் வீணாக கலக்கப்படுகிறது. விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் மக்களின் தேவைகளை அறிந்து செயல்திட்டங்களை வகுத்து கோரம்பள்ளம் குளத்தை தூா்வார வேண்டும் என்றாா் அவா்.

கோரம்பள்ளம் வடிநில கோட்ட உயா் அதிகாரி ஒருவா் கூறியது: அரசின் வெள்ளப் பேரிடா் நிதியில் இருந்து ரூ. 58.5 கோடி மதிப்பில் நிரந்தர தீா்வுக்கு வழி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. உப்பாறு ஓடையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளில் சில அகற்றப்பட்டுள்ளன. தொடா்ந்து, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.