சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகளை சாத்தான்குளம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஞானியார் குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி வயது 63 ). இவர் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் தியாகு என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தார். அவருடன் அவரது மகள் அமுதா (வயது 35) உதவியாக இருந்து வந்தார். இந்நிலையில் இந்த தோட்டத்தை குத்தகை எடுக்க மகளின் நகையை வாங்கி வங்கியில் அடகு வைத்ததாக கூறப்படுகிறது.
நகை அடகு வைக்கப்பட்டு ஐந்து மாதத்துக்கு மேலானதால் நகையை திருப்பித் தருமாறு தந்தையிடம் மகள் கேட்டு வந்தார். ஆனால் திருப்பிக் கொடுக்காமல் தந்தை கால தாமதம் செய்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மகள் தந்தையின் பைக் சாவியை பிடுங்கி வைத்ததாக தெரிகிறது. நகையை திருப்பி தந்து விட்டு சாவி வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் தந்தை மகள் வைத்திருந்த சாவியை எடுத்து வண்டியை ஓட்டி முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மகள் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்னையில் மகள் அமுதா தந்தை ஆறுமுக பாண்டியை அவதூறாக பேசி அங்கிருந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .
இதுகுறித்து ஆறுமுக பாண்டி மனைவி வாசுகி (வயது 60) சாத்தான்குளம் காவல் துறையினரிரம் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் பாஸ்கரன் கொலை முயற்சி வழக்கில், வழக்குப் பதிவு செய்து அமுதாவை கைது செய்து நெல்லை கொக்கரகுளம் சிறையில் அடைத்தார்.
இதையும் படிக்க: ஓணம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு
இந்நிலையில் இன்று காலை ஆறுமுக பாண்டி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து சாத்தான்குளம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் அருகே தந்தையை மகள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.