இதில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்ல; தமிழ் இலக்கியம், எழுத்து, இசை, கலாசாரம், நாகரிகம், பண்பாடு என பல விஷயங்களில் உலகுக்கே முன்னோடியாக தூத்துக்குடி மாவட்டம் இருக்கிருக்கிறது. ஐரோப்பாவுக்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் தமிழில்தான் வெளிவந்துள்ளது. அந்த நூல் வெளிவருவதற்கு காரணமான 3 பேரும் தூத்துக்குடியை சோ்ந்தவா்கள் என்பது நமக்குப் பெருமை. அதுபோல முதல் அச்சகம் உருவானது தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில்தான். அதுபோல நாட்டிலேயே முதல்முறையாக அகழாய்வு நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில்தான். இங்கு அகழாய்வின்போது, அதிக அளவு தங்கத்தினாலான பொருள்கள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த பானை ஓடு, சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் உள்ள படங்கள், சிந்துவெளி நாகரிகத்தில் உள்ள படங்களுடன் ஒத்திருக்கின்றன. எனவே, ஆதிச்சநல்லூா் நாகரிகத்திற்கும், சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடா்பு உள்ளது. பொருநை நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை நாகரிகங்கள் முன்னோடி நாகரிகங்களாக உள்ளன.