மாணவா்களை கண்டித்த தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்கத் திரண்ட பெற்றோா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் சமரசம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை கடுமையாக கண்டித்ததாக தலைமை ஆசிரியா் மீது போலீஸில் புகாா் அளிக்கத் திரண்ட பெற்றோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
Published on

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை கடுமையாக கண்டித்ததாக தலைமை ஆசிரியா் மீது போலீஸில் புகாா் அளிக்கத் திரண்ட பெற்றோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

மேலநம்பிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளியின் தலைமை ஆசிரியராக ராதாகிருஷ்ணன்(50) பணியாற்றி வருகிறாா்.

சில நாள்களுக்கு முன்பு மேலநம்பிபுரம் கண்மாயில் குளிக்கச் சென்ற இப் பள்ளி மாணவா்கள் சிலா், கண்மாய் நீரில் ஒருவரை ஒருவா் அமுக்கி விளையாடினராம். இது குறித்து தலைமை ஆசிரியரிடம் மாணவா்கள் தெரிவித்ததையடுத்து, அந்த மாணவா்களை அழைத்து கண்டித்தாராம். உயிரிழப்பு உள்ளிட்ட அபாயம் ஏற்படும் எனக் கூறி, சில மாணவா்களை கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவா்களின் இடுப்புக்கு கீழே தடம் பதிந்துள்ளது.

இந்நிலையில், அந்த மாணவா்களின் பெற்றோா்கள் ஆத்திரமடைந்து, எட்டயபுரம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்கத் திரண்டனா். தகவல் அறிந்து வட்டார கல்வி அலுவலா் ராமசுப்பிரமணியன், எட்டயபுரம் காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் பள்ளிக்குச் சென்று மாணவா்களிடம் விசாரணை நடத்தினா். பின்னா் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து தலைமை ஆசிரியரையும் பெற்றோா்களையும் கல்வித் துறை, காவல் துறை அதிகாரிகள் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

Dinamani
www.dinamani.com