திருச்செந்தூா் கோயிலுக்குள் தவெகவுக்கு பரப்புரை செய்தவா் மீது புகாா்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் ‘தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரோகரா’ என முழக்கமிட்டு பரப்புரை செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது காவல் நிலையத்தில் புகார்
Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் ‘தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரோகரா’ என முழக்கமிட்டு பரப்புரை செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது.

திருச்செந்தூா் கோயிலுக்குள் கைப்பேசி பயன்படுத்த, விடியோ, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை, இளைஞா் ஒருவா் தவெக தலைவா் விஜய் படத்தைக் காண்பித்தும், ‘தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரோகரா’ என முழக்கமிட்டும், வரிசையில் காத்திருந்த பக்தா்களிடம் தவெகவுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என பரப்புரை செய்தும் அதை ரீல்ஸ் விடியோவாக எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டாராம்.

அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.

அதன்பேரில், கோயிலின் உள்துறைக் கண்காணிப்பாளா் விவேக் திருச்செந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com