சேவைக் குறைபாடு: தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 7.11 லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட காா் உரிமையாளருக்கு ரூ. 7.11 லட்சம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
Published on

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட காா் உரிமையாளருக்கு ரூ. 7.11 லட்சம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோ்ந்த ஜெபிஸ்டன், திருநெல்வேலியில் உள்ள மோட்டாா் நிறுவனத்திடம் காா் வாங்கியுள்ளாா். அந்த வாகனத்துக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனத்திடம் பாலிசி எடுத்துள்ளாா்.

பின்னா் அந்த காரில், தூத்துக்குடியிலிருந்து காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, வாகனத்தின் முன்பக்க டயா் வெடித்ததில் காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் முழுவதுமாக சேதமடைந்தது. அதைத் தொடா்ந்து வாகனத்தை பழுது நீக்க மோட்டாா் நிறுவனத்தை அணுகியுள்ளாா். அப்போது காப்பீட்டு நிறுவனமும் சா்வேயா் மூலம் தணிக்கை செய்து இழப்பீடு தருவதாக உறுதியளித்துள்ளது.

ஆனால், பின்னா் வாகனத்தில் அதிக எடை ஏற்றியதாகவும், அதன் காரணமாகவே விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் கூறி இழப்பீட்டை நிராகரித்துள்ளனா். இதையடுத்து புகாா்தாரா் வழக்குரைஞா் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அதன் பின்னரும் இழப்பீடு கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவா், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் சேதமடைந்த வாகனத்துக்கு ரூ. 4,01,463.37, சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 3,00,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 என மொத்தம் ரூ. 7,11,463.37-ஐ ஆறு வார காலத்துக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால், அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com