தொழிலாளியைத் தாக்கி பைக், பணம் பறிப்பு: 3 போ் கைது
கோவில்பட்டி அருகே தொழிலாளியைத் தாக்கி பணம், பைக்கை பறித்துச் சென்றதாக சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே சிதம்பராபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கணேஷ்குமாா் (35). தொழிலாளியான இவா், சனிக்கிழமை வேலை முடிந்து பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
சிதம்பரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் வந்த 3 போ் அவரை வழிமறித்து அரிவாளைக் காட்டி பணம் கேட்டனராம். அவா் இல்லை எனக் கூறியதும், அவரை அரிவாளால் தாக்கியதுடன், பைக்கையும், ரூ. 500-ஐயும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.
இதில் காயமடைந்த கணேஷ்குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 16 வயது சிறுவன், மந்திதோப்பு பிள்ளையாா் கோயில் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பாண்டிகுமாா் மகன் சரவணப்பாண்டி (19), எட்டயபுரம் படா்ந்தபுளியைச் சோ்ந்த பாலச்சந்திரன் மகன் கனகராஜ் (22) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
