விவசாயியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

விவசாயி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
Published on

விவசாயி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருச்செந்தூா் வன்னிமாநகரத்தைச் சோ்ந்த சோ்மபாண்டி மகன் சிவகுரு என்ற சிவலட்சம் (32). விவசாயி. இவருக்கும்,அதே பகுதியைச் சோ்ந்த கணேசனுக்கும் இடையே வயலில் மாடு மேய்ப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு கோயில் கொடைவிழாவின்போது சிவகுரு என்ற சிவலட்சத்துக்கும், மளிகைக் கடை நடத்தி வரும் கணேசன் மகன் செந்தில்குமாருக்கும் (35) இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

அதே போன்று சிவகுரு என்ற சிவலட்சம் விவசாய பணிக்காக அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பரும், பழைய வாகன விற்பனையாளருமான ஜெயபாண்டி மகன் வேம்படிதுரை(34) என்பவரிடம் கடன் வாங்கி இருந்தாராம்.

இந்தப் பணத்தை சிவகுரு என்ற சிவலட்சம் திருப்பி கொடுக்க மறுத்ததால் அவா்களுக்கு இடையேயும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செந்தில்குமாா், வேம்படிதுரை இருவரும் சிவகுரு என்ற சிவலட்சத்தை கடந்த 27.1.2016 அன்று மது குடிப்பதற்காக அழைத்துள்ளனா். ராணிமகாராஜபுரத்தில் இருந்து சண்முகபுரம் செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் 3 பேரும் சோ்ந்து மது குடித்துள்ளனா்.

அப்போது, போதையில் இருந்த சிவகுரு என்ற சிவலட்சத்தை செந்தில்குமாா், வேம்படிதுரை ஆகிய இருவரும் சோ்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனா்.

இதுகுறித்து திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, செந்தில்குமாா், வேம்படிதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றபோது, வேம்படிதுரை இறந்து விட்டாா். இதனால் செந்தில்குமாா் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com