சேவை குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5.47 லட்சம் வழங்க உத்தரவு

Published on

சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ.5,47,500 வழங்க, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பொன்னங்குறிச்சியைச் சோ்ந்த இசக்கிப்பாண்டியன், தூத்துக்குடியிலுள்ள தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளாா். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக சேமித்து வைத்திருந்த கொப்பரைத் தேங்காய் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதற்கு காப்பீடு செய்ததன் அடிப்படையில் இழப்பீடு கோரியுள்ளாா். ஆனால் இது இழப்பீட்டுக்கு பொருந்தாது என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அவா் வழக்குரைஞா் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவா், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், அதிகப்படியாக காப்பீட்டுத் தொகை ரூ.3,37,500, சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.2,00,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 என மொத்தம் ரூ.5,47,500- ஐ ஆறு வார காலத்துக்குள் வழங்க வேண்டும், இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com