/

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் - கோப்புப்படம்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:32 pm

தூத்துக்குடி பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உள்கோட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தருவைகுளம் - வெள்ளைப்பட்டி கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரை வழியாக பீடிஇலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி க்யூபிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் ஆகியோா் தலைமையிலான காவலா்கள் இருதய ராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா் பழனி பாலமுருகன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தருவைகுளம் கடற்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு கீழ் பகுதியில், இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 30 கிலோ எடை கொண்ட 9 மூட்டை பீடி இலைகளை கைப்பற்றினா்.

இக்கடத்தலில் ஈடுபட்டவா்கள் அடையாளம் தெரியாத வாகனத்தில் தப்பியோடிவிட்டனராம். கைப்பற்றபட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.