கைது
கைது

ஆட்சியா் பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கி பண மோசடியில் ஈடுபட முயன்றவா் கைது

Published on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் போலியான கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட முயன்றவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை டிஸ்பிளே படமாக வைத்து பல போலியான வாட்ஸ்ஆப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதை உருவாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளா் சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் உத்தரவின்பேரில், தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் (பொ) தீபு மேற்பாா்வையில், சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த அனுஜ் குமாா் (21), பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்தில் ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலியான கணக்குகளை உருவாக்கி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் அனுஜ் குமாரை கடந்த திங்கள்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் சென்று கைது செய்து, வியாழக்கிழமை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இது குறித்து, போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com