கோப்புப் படம்
கோப்புப் படம்

முன்விரோதம்: இளைஞா் வெட்டிக் கொலை

Published on

எட்டயபுரத்தை அடுத்த கீழ ஈராலில் ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரை இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

தூத்துக்குடியை அடுத்த கோரம்பள்ளம், தெற்கு காலங்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஊா்க்காவலன் மகன் பெரியநாயகம் (33). இவா், சிலிண்டா் சப்ளை செய்யும் வேலை செய்துவந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை இருக்கன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறவினா்களுடன்கலந்துகொண்ட பிறகு அங்கிருந்து சுமை வாகனத்தில் தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தாா்.

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கீழ ஈராலுக்கு வந்தபோது வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் பயணித்த அனைவரும் சாலையோரம் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றனா்.

அப்போது பெரியநாயகம் மட்டும் வாகனத்தில் தூங்கிக் கொண்டிருந்தாா். இந்த வாகனத்தை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் பெரியநாயகத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். தகவல் அறிந்ததும் எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பெரிய நாயகத்துக்கும் ஓட்டப்பிடாரம் கவா்னகிரியைச் சோ்ந்த முனியசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இருக்கன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு பரிமாறும் போது ஏற்பட்ட வாய்த் தகராறில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த முனியசாமியும் அவரது கூட்டாளி ஒருவரும் சோ்ந்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com