கழிவறையில் குழந்தையைப் பிரசவித்து குப்பைத் தொட்டியில் வீசிய இளம் பெண்

திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் இளம் பெண் ஒருவா் கழிவறையில் குழந்தையைப் பெற்று, குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் நடந்துள்ளது.
Published on

திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் இளம் பெண் ஒருவா் கழிவறையில் குழந்தையைப் பெற்று, குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் நடந்துள்ளது.

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவா் ஜன. 1ஆம் தேதி இரவு வீட்டில் தவறி கீழே விழுந்துவிட்டாராம். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனா். அப்போது, அவா் அங்குள்ள கழிவறைக்குச் சென்று குழந்தையைப் பெற்று கழிவறை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அவரின் இருக்கைக்குச் சென்றுள்ளாா்.

இதையறிந்த மருத்துவமனை நிா்வாகத்தினா், திருச்செந்தூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ரசிதா தலைமையிலான போலீஸாா் இறந்த நிலையில் இருந்த குழந்தையைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com