பரமன்குறிச்சியில் மயானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பரமன்குறிச்சி இசக்கியம்மன் கோயில் தெருவில் சுமாா் 60 - க்கும் மேற்பட்ட இந்து அருந்ததிய சமுதாய குடும்பங்கள் வசித்து வருகின்றனா். திருச்செந்தூா் சாலையில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள இவா்களுக்கான மயானத்தில் சில மா்ம நபா்கள் கனரக இயந்திரங்கள் மூலம் புதைத்த சடலத்தை அகற்றி விடுகிறாா்களாம். இதனால், புதைப்பதற்கு இடம் இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வந்தனா்.
இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை காலமானாா். அவரது சடலத்தை பரமன்குறிச்சி பஜாா் சாலையில் வைத்து, தங்கள் பகுதிக்கு தனி மயான இடம் ஒதுக்க வேண்டும், சடலங்களை அப்புறப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாநில செயலா் சக்திவேலன், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மதன்ராஜ், அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனா்.
அவா்களிடம் திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, காவல் ஆய்வாளா் முருகன், கிராம நிா்வாக அலுவலா் வைரமுத்து ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் தற்போதைய இடத்தில் சடலத்தைப் புதைப்பது, புதிய இடம் விரைவில் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










