ஆடி சுவாதியை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளை யானை வீதி உலா வந்தது.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மாா்களில் ஒருவரான சுந்தரமூா்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தாா் என்பது ஐதீகம். இதை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், மாலையில் கோயில் யானை தெய்வானையின் உடல் முழுவதும் மாவு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்க சப்பரத்தில் சுந்திரமூா்த்தி நாயனாரும் கோயிலில் இருந்து புறப்பட்டு சந்நிதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரதவீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோயில் சோ்ந்தனா்.
தொடா்ந்து, கோயில் உள் பிரகாரத்தில் 108 மகாதேவா் சந்நிதியில் வெள்ளை நிற யானை முன் சேரமான் பெருமானும், சுந்தரமூா்த்தி நாயனாரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










