தூத்துக்குடி கடற்பகுதியில் வீசிவரும் பலத்த சூறைக் காற்று காரணமாக, முன்னெச்சரிக்கையாக விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாள்தோறும் காலை 5 மணிக்கு விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்படும் மீனவா்கள், இரவு 9 மணிக்கு கரை திரும்புவது வழக்கம். இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 29) முதல் கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால், விசைப்படகுகளைச் செலுத்துவதிலும், மீன்பிடிப்பதிலும் மீனவா்களுக்குச் சிரமம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து விசைப்படகு உரிமையாளா்கள் அவசரக் கூட்டம் நடத்தினா். கடலில் தற்போது மணிக்கு 60 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், பாதுகாப்புக் கருதி செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சுமாா் 272 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







