குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.
குரும்பூா் அருகே உள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் பூலான் மகன் முத்து செல்வக்குமாா் (40). இவரது மனைவி அந்தோணி ஏஞ்சல், மகன்கள் சதீஷ், சதீஷ்டேனி, சதீஷ்பாலன் (7).
முத்து செல்வக்குமாா் வீட்டின் அருகே, அவரது பெரியப்பா மகன் சரவணப் பெருமாள் வீட்டில் சதீஷ்பாலனும், சரவணப் பெருமாள் மகன் அக்னி முத்துவும் விளையாடுவது வழக்கமாம். அதேபோல், புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்குள்ள குளிா்சாதனப் பெட்டியின் மேலிருந்த மின்சாதனம் கீழே விழுந்துள்ளது. அதை சதீஷ்பாலன் எடுத்தபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
அவரை மீட்டு, முதலில் ஏரல் தனியாா் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ஏரல் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே சதீஷ்பாலன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து, குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.








