நோய் பாதிப்பு அச்சத்தில் பாப்பாக்குறிச்சி மக்கள்

திருவெறும்பூர், டிச. 28: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், பாப்பாக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படாததாலும், தேங்கிக் கிடக்கும் மழை நீராலும் தொற்றுநோய் ப
Updated on
1 min read

திருவெறும்பூர், டிச. 28: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், பாப்பாக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படாததாலும், தேங்கிக் கிடக்கும் மழை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 சுமார் 10,000-க்கும் அதிகமானோர் வசித்து வரும் இந்தப் பகுதியில் கடந்த பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை. மேலும், அண்மையில் பெய்த மழையால் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை வடியச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 காட்டூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பிரதான சாலை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடை, ஆயில் மில் பர்மா காலனி நியாய விலைக் கடை, எல்லக்குடி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் மலை போலக் குவிந்து கிடக்கின்றன. இதனால், இந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

 இதேபோல, சேரன்நகர், சோழன்நகர், அண்ணாநகர், எம்ஜிஆர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியாமல் தேங்கிக் கிடக்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் இந்தப் பகுதி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல, பன்றிகள் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், மலேரியா காய்ச்சால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் இந்தப் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களில் அண்மைக்காலமாக நாள்தோறும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

 இதேபோல, பாப்பாக்குறிச்சி ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாததால், மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது. இதனிடையே, குப்பைகளை அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வடியச் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி சேரன்நகர், சோழன்நகர், அண்ணாநகர் பகுதி மக்கள் அளித்த மனுவுக்கும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, தொற்று நோய் பாதிப்பு தீவிரமாவதற்கு முன்னதாக குப்பைகளை அகற்றவும், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வடியச் செய்யவும், சுற்றித் திரியும் பன்றிகளைக் கட்டுப்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com