கழிப்பறை இல்லாத ரயில்: பயணிகள் அவதி

கரூர், ஜூன் 11: சாதாரண மக்களுக்கான வரப்பிரசாதமாக கரூரிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து கரூருக்கும் தினமும் இரு முறை செல்லும் சாதாரண ரயிலில், கழிப்பறை இல்லாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளா
Updated on
1 min read

கரூர், ஜூன் 11: சாதாரண மக்களுக்கான வரப்பிரசாதமாக கரூரிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து கரூருக்கும் தினமும் இரு முறை செல்லும் சாதாரண ரயிலில், கழிப்பறை இல்லாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்சியை மையமாக வைத்து சுற்று ரயில் போக்குவரத்து அமைக்கப்பட்டால், அவற்றில் முக்கியமான வழித்தட மையம் கரூர். ஜவுளித் தொழில் நிரம்பிய கரூருக்கு திருச்சியிலிருந்தும், இடையேயுள்ள குளித்தலை, லாலாபேட்டை உள்ளிட்ட நிறுத்தங்களில் இருந்தும் வந்து செல்லும் ஏராளமானோரில் பெரும்பாலானோர் ரயில் பயணிகள்.

எனவே, இந்தத் தடத்தில் காலை, மாலை வேளைகளில் அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் குறிப்பாக, "டெமோ' என்றழைக்கப்படும் ரயில் திருச்சி- கரூர் சாதாரண வண்டி (வழித்தட எண்கள்: 880, 879, 883, 884) முக்கியமானது.

இந்த ரயில் கரூரிலிருந்து காலை 6.50-க்குப் புறப்பட்டு திருச்சி செல்லும். பின்னர் அங்கிருந்து காலை 9.30-க்குப் புறப்பட்டு கரூரை வந்தடையும்.

பகலில் கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த ரயில், மீண்டும் பிற்பகல் 3.30-க்குப் புறப்பட்டு திருச்சி சென்று, பின்னர் அங்கிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு கரூரை வந்து சேரும்.

இப்படியாக வழித்தடம் வடிவமைக்கப்பட்ட இந்த ரயிலின் கட்டணம் 12 ரூபாய்தான். பேருந்துகளில் ரூ. 25. ரயில் கட்டணம் பாதிக்குப் பாதி என்பதால், நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ரயிலில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்-  இத்தனை ஆண்டுகாலமாக கழிப்பறை வசதியின்றியே.

தில்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் மின்சார ரயிலில் பயன்படுத்தப்படும் என்ஜின், பெட்டிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் கழிப்பறை இருக்காது என்று ரயில்வே துறை விளக்கமளிக்கிறது.

இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் எச். சாகுல்அமீது கூறியது:

80 கிமீ தொலைக்குக் குறைந்த ரயில் பயணத்துக்கு கழிப்பறை வசதி தேவையில்லை என்று ரயில்வே துறையின் விதிகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 5 ஆண்டு காலமாகப் போராடி வருகிறோம். எளிய, நடுத்தர வசதியுடைய பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த ரயிலுக்கு விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

கரூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ். அண்ணாதுரை கூறியது:

திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் ரயிலுக்கும் இதே நிலைதான் இருந்தது. நாங்கள் தொடர்ச்சியாகப் போராடி மாற்றினோம். ஒவ்வொரு முறையும் நடைபெறும் கூட்டங்களிலும் பேசுகிறோம். 2 மணி நேரத்துக்கு ஒரு முறைதான் இயற்கை உபாதைகளை மனிதன் கழிக்கிறான் என்றெல்லாம் அதிகாரிகள் வினோதமாகப் பதிலளிக்கின்றனர். இதுமுறையல்ல என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com