காவலர் பற்றாக்குறையால் திணறும் காவல் நிலையங்கள்

திருவெறும்பூர், செப். 21: காவலர்கள் பற்றாக்குறையால் திருவெறும்பூர், துவாக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்கள் பெரிதும் திணறி வருகின்றன.     தமிழகத்தில் 1258 பொது காவல் நிலையங்களும், 196 மகளிர் காவல் நிலையங
Updated on
2 min read

திருவெறும்பூர், செப். 21: காவலர்கள் பற்றாக்குறையால் திருவெறும்பூர், துவாக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்கள் பெரிதும் திணறி வருகின்றன.

    தமிழகத்தில் 1258 பொது காவல் நிலையங்களும், 196 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் 1,03,843 காவலர்கள் இருக்க வேண்டிய நிலையில், 88,672 காவலர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.

  நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மக்கள்தொகை, வளர்ச்சி அடைந்து வரும் தொழில் துறை வளர்ச்சி இவற்றின் ஊடே காவலர்களின் எண்ணிக்கை மிக,மிகக் குறைவாக உள்ளது.

   திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், துவாக்குடி, நவல்பட்டு, பெல் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் போதிய காவலர்கள் இல்லாததால், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறாமல் அவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

  துவாக்குடி காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் சுமார் 60,550 மக்களும், 300-க்கும் மேல்பட்ட தனியார் தொழில்சாலைகளும், அரசு கலைக் கல்லூரி, தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் பல அரசு அலுவலகங்களும் உள்ளன.

  ஆனால், காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களோ மிகக் குறைவு. இந்தக் காவல் நிலையத்தில் ஓர் ஆய்வாளர், ஓர் உதவி ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேரும், தலைமைக் காவலர்கள் 7 பேரும், 4 காவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.

  இவர்களில், நீதிமன்றப் பணிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு என தலா ஒருவரும், வாகன ஓட்டுநராக ஒருவர் எனவும் பணியிலிருக்க, இருவர் விடுமுறையிலும், மேலும் இருக்கும் ஒரு சிலரும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு பணிக்கும் சென்று விடுகின்றனர்.

   இதனால், காவல் நிலையத்தில் நாள்தோறும் ஓரிருவர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் விசாரணைக்குச் செல்ல நேரிட்டால், காவல் நிலையத்தை பூட்டிவிட்டுச் செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால், பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெறாமல் அவர்களை போலீஸôர் திருப்பி அனுப்புவதாகக் கூறப்படுகிறது. இதே நிலையில்தான் திருவெறும்பூர், நவல்பட்டு காவல் நிலையங்களும் உள்ளன.

   இதுகுறித்து காவலர் ஓருவர் கூறியது:

   துவாக்குடி பகுதியில் மக்கள்தொகை, தொழில்சாலைகள் முன்பு குறைவாக இருந்தன. தற்போது மக்கள்தொகை உயர்வால் ஆங்காங்கே புதிய புதிய நகரங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்சாலைகள் எனத் தோன்றியுள்ளன. ஆனால், அப்போதிருந்த மக்கள்தொகை அடிப்படையிலேயே தற்போதும் காவலர்கள் பணியில் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் நியமிக்கப்படாததோடு, ஏற்கெனவே காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

  காவலர்கள் இருந்தால்தானே பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களைப் பெற்று, விசாரணைக்கு செல்ல முடியும். இருக்கும் ஒரு சில காவலர்களையும் ஆங்காங்கே நடக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பிவிடுகின்றனர்.

     இந்த நிலையில் விசாரணைக்கு எவ்வாறு செல்ல முடியும்? தற்போதுகூட காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. ஆனால், இந்தக் காவலர்களின் எண்ணிக்கையும் போதாது என்றார் அவர்.

   காவல் துறை சிறப்பாக செயல்பட்டால்தான் பொதுமக்கள் அமைதியாகவும், அச்சமின்றியும் வாழ முடியும். எனவே, மக்கள்தொகை அதிகமாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப போதிய காவலர்களை நியமிக்க வேண்டும். தற்போதுள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com