திருவெறும்பூர், பிப். 14: திருச்சி அரியமங்கலம் அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் நான்கு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல், புதர்கள் மண்டி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
தமிழகத்தில் உள்ள கிராம, நகர மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளைக் கட்டி தந்து, அங்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் நீண்ட மற்றும் குறுகிய கால தவனை முறையில் அதற்குரிய தொகையைச் செலுத்தி, வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுபோல, திருச்சி அரியமங்கலம் அருகே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் நான்கு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளன.
அரியமங்கலம் அருகே உள்ள கீழ அம்பிகாபுரம் திருச்சி மாநகராட்சியின் 29-வது வார்டு பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் 12-வது நிதிக் குழு நிதியுதவியுடன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ரூ. 1.11 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளைக் கட்டியது. இதில் 90 வீடுகள் உள்ளன.
இந்த வீடுகள் அரசியல் காரணங்களால் திறக்கப்படாமல் இருப்பதால். மக்களுக்கும் பயன் இல்லாமல் போனது மட்டுமல்லாமல், தற்போது இந்த இடம் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கட்டடத்தில் இரவு நேரங்களில் மது அருந்துவதற்கும், பல சமூக விரோதச் செயல்களுக்கும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். குடியிருப்பு கட்டடத்தில் பொருத்தப்பட்ட மின் சாதனப் பொருள்கள், குடிநீர்க் குழாய்கள், ஜன்னல்கள் என பல கட்டுமானப் பொருள்கள் மாயமாகிவிட்டன.
தண்ணீர் பம்பு செட் அறைகளில் உள்ள மின் பொருள்கள், கழிவறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டடத்தைச் சுற்றி முள் புதார்கள் மண்டி, விஷ ஜந்துகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.
மேலும், பிற பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இங்கு தேங்கி நிற்பதுடன், குப்பைகள் மலை போல குவிந்துக் குடியிருப்பு வளாகம் சுகாதாரமற்று காணப்படுகிறது.
இதுகுறித்து இப் பகுதி மக்கள் கூறியது:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அப்போது வீடுகள் கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால், எங்களுக்கு வீடுகள் இல்லை என்று கூறிவிட்டனர். இதுதொடர்பாக விசாரித்த போது, சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பரிந்துரையின் பேரில், பலருக்கு அந்த வீடுகள் ஓதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை அந்த வீடுகளில் யாரும் குடியேறவும் இல்லை. இதற்கும் என்ன காரணம் என்று விசாரித்த போது, குடிசை மாற்று வாரியம் இதுவரை குடியிருப்பைக் கட்டிய ஓப்பந்ததாரர்களுக்கு அதற்குரிய தொகையை வழங்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், அதிமுக ஆட்சியில் இந்த குடியிருப்பு கட்டடம் கட்ட தொடங்கப்பட்டதால்தான், இந்த வீடுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் திறக்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
காரணம் எதுவாயினும், ரூ. 1.11. கோடியில் கட்டப்பட்ட இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை மக்களுக்கு ஓதுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.