கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் அவதி

திருச்சி, ஜூன் 16: திருச்சி தனியார் மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவருக்கு, தற்போது மீண்டும் அந்த இடத்திலிருந்து "சீழ்' வடிந்து கொண்டே இருப்பதால், அவருக
Updated on
2 min read

திருச்சி, ஜூன் 16: திருச்சி தனியார் மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவருக்கு, தற்போது மீண்டும் அந்த இடத்திலிருந்து "சீழ்' வடிந்து கொண்டே இருப்பதால், அவருக்கான அடுத்தகட்ட சிகிச்சை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

 அரசு தனிக் கவனம் செலுத்தினால் சென்னை அல்லது மதுரையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டு சரி செய்துவிடலாம் என்றும் மருத்துவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 திருச்சி சமயபுரம் சோழன் நகரைச் சேர்ந்தவர் ஆ. மணிமாறன் (39). தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய இவருக்கு கடந்த 2010, ஜன. 12-ல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இடுப்பு பகுதியிலுள்ள பந்து கிண்ண மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 அதன்பிறகு, சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அந்த இடத்தில் வலியும், சீழ் வடிவதும் ஏற்படவே மீண்டும் அந்த மருத்துவமனைக்கே சென்றார் மணிமாறன்.

 ஏற்கெனவே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 75 ஆயிரம் வரை செலவழிக்கப்பட்டு, அந்தத் தொகை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மீளப் பெறப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள ரூ. 1.50 லட்சம் செலவாகும் எனக் கூறி மணிமாறன் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டாராம்.

 மனைவி, இரு பெண் குழந்தைகள், ஒரு மகன் ஆகியோருடன் பணியும் செய்ய முடியாமல் குடும்ப வறுமைக்குள் சிக்கிய மணிமாறன், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையையும் அணுகினார்.

 தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், தற்போது தங்களால் அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ள முடியாது எனக் கைவிரித்தனர்.

 இந்த நிலையில், தனது நிலையை நீண்ட மனுவாக எழுதி தலைமைச் செயலகத்துக்கு பேக்ஸ் மூலம் அனுப்பினார் மணிமாறன். மேலும், வியாழக்கிழமை திருச்சி வந்திருந்த மாநில நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் திருச்சி எம்பி ப. குமார் ஆகியோரிடம் மனு அளித்தார் அவர்.

 இதுதொடர்பாக மணிமாறன் கூறியது:

 "அறுவைச் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ள உலோக மூட்டை எடுத்துவிட்டு, அங்கு "சீழ்' பிடித்துள்ள பகுதிகளை முற்றிலும் குணப்படுத்திய பிறகு மீண்டும் ஓர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு புதிய செயற்கை மூட்டை வைக்க வேண்டும் என்கின்றனர்.

 அத்தனை காலம் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க வசதியில்லை. அரசுதான் ஏதாவது முயற்சி எடுத்து என் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும்' என்கிறார் மணிமாறன்.

 காப்பீடு கொடுக்கும் நிறுவனமே சில பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவமனையின் தவறை உறுதி செய்தால், மீண்டும் அதே மருத்துவமனை முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்க உறுதி செய்யலாம். ஆனால், இதற்கும், நீதிமன்றத்தை அணுகினாலும் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உடனடித் தீர்வுக்கு அரசு மருத்துவத் துறை கருணை காட்டினால்தான் உண்டு.

 ""அரசு மருத்துவமனைகளை சிறப்பாக தரம் உயர்த்துவதை விட்டுவிட்டு கவர்ச்சிகரமான காப்பீட்டுத் திட்டங்களில் அரசுகள் மூழ்குவதே தவறு. அப்படி செய்யும்போதும் அறுவைச் சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்களுக்கு சட்டத்தில் ஏதாவது வழி வகை செய்ய வேண்டும்.

 குறிப்பிட்ட இந்த (மணிமாறன்) விவகாரத்தில் காலதாமதமாகும் என்றபோதும் நீதிமன்றத்தை நாடும் திட்டமும் இருக்கிறது'' என்கிறார் வழக்குரைஞர் எஸ். மார்ட்டின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com