எச்ஐவி- எய்ட்ஸ் பெயரால் பெரும் மோசடி?

திருச்சி, மார்ச் 15: போலிப் பட்டியல் மற்றும் பரிசோதனை எடுத்துக் கொண்டு, எச்ஐவி- எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபடுவதாக சில தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி அர
Updated on
2 min read

திருச்சி, மார்ச் 15: போலிப் பட்டியல் மற்றும் பரிசோதனை எடுத்துக் கொண்டு, எச்ஐவி- எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபடுவதாக சில தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியில் கடந்த ஓரிரு நாள்களாக "கிருமி பரிசோதனை' என்ற பெயரில் இரு பெண்கள் அப்பகுதி மக்களிடம் ரத்த மாதிரி எடுத்தனர். வியாழக்கிழமை முற்பகலில் சுமார் 15 பேருக்கு ரத்த மாதிரி எடுத்துவிட்டு, பெயர்- முகவரி வாங்கிக் குறித்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த மக்கள் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுத் துளைக்க பரிசோதனை செய்ய வந்த பெண்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த, அன்பின் பெயரால் தொண்டு நிறுவனம் நடத்தும் ஒருவர் அந்த மக்களை சமாதானம் செய்ய முயன்றார்.

இருப்பினும், அசராத அந்தப் பகுதி மக்கள் பரிசோதனை எடுக்க வந்தவர்களை அழைத்து வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அப் பகுதியைச் சேர்ந்த வாசுகி கூறியது:

"உடம்பில் கிருமி இருக்கிறதா? என வீடுகளுக்கு வந்து பரிசோதித்தனர். டாக்டர்கள் மூலம் வந்தோம். யானைக்கால் நோய் வருகிறதா? எனப் பரிசோதிக்க வந்திருக்கிறோம் என்றனர். எனவே, பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டோம்' என்றார் வாசுகி.

இதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி கூறியது:

"ரத்தம் பரிசோதிக்கிறோம் வந்து செய்து கொள்ளுங்கள் என்று கூப்பிட்டார்கள். எனது மனைவி, இன்னும் நிறைய பேர் பரிசோதனை எடுத்துக் கொண்டோம். எந்த விவரமும் தெரியவில்லை. டாக்டர்கள் யாரும் வரவில்லை' என்றார் கொளஞ்சி.

இந்தப் பரிசோதனை தொடர்பாக மாவட்ட மற்றும் மாநகராட்சி சுகாதார வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது, தங்கள் தரப்பிலிருந்து எந்தப் பரிசோதனையும் இப்போது மேற்கொள்ளப்படவில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல சில தொண்டு நிறுவனங்கள் போலிப் பட்டியல் தயாரித்து, நிதி பெற்று பணியாற்றுவது குறித்த புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் "தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்' என்ற அரசு சார்ந்த நிறுவனமும், மேலும் இரு பெரும் நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்த மூன்று நிறுவனங்களின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில- பல தொண்டு நிறுவனங்கள் மூலம் எச்ஐவி- எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது தனியார் நிறுவனங்களான அந்த இரு பெரும் நிறுவனங்களின் பணிக்காலம் மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், தங்களின் திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் வேகத்தில் அரியமங்கலம் பகுதியில் இவ்வாறான போலிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கின்றனர் மருத்துவத் துறையினர்.

ஆனால், அரசு அல்லது அரசு சார்ந்த எந்த நிறுவனம் மூலமும் அரியமங்கலம் பகுதியில் எந்தப் பரிசோதனையும் நடத்தப்படவில்லை என்றும் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதையும் அரசு சார்புள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கமே எச்ஐவி- விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன. இந்த ஏற்பாடும்கூட, ஏற்கெனவே தவறான வழியில் செல்லும் நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் எனத் தெரிவிக்கின்றனர் இப் பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள்.

மாநிலம் முழுவதும் இதுபோன்ற தவறான பட்டியலைக் கொடுத்து (எய்ட்ஸ் தொற்றுள்ளவர்கள் என்று!), போலியாக விழிப்புணர்வுப் பணிகளைச் செய்ததாக பெரும் தொகை மோசடி செய்யப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த 2011-12-ம் நிதியாண்டில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற எச்ஐவி- எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டவர்கள் அளித்த அறிக்கைகளைக் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்துவது மட்டும்தான் இதற்கு ஒரே வழி என்றும் கூறுகின்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com