கழிப்பறை இருந்தும் திறந்தவெளியைப் பயன்படுத்தும் மக்கள்!

திருச்சி, மார்ச் 18: கழிப்பறை இருந்தும், பொதுமக்கள் திறந்தவெளியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் காட்சி எங்கோ கிராமப் பகுதியில் இல்லை, திருச்சி மாநகரில்- அதிலும் குறிப்பாக முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதிய
Updated on
1 min read

திருச்சி, மார்ச் 18: கழிப்பறை இருந்தும், பொதுமக்கள் திறந்தவெளியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் காட்சி எங்கோ கிராமப் பகுதியில் இல்லை, திருச்சி மாநகரில்- அதிலும் குறிப்பாக முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதியில்.

திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள மாநகராட்சி 4-வது வார்டை சேர்ந்த அம்பேத்கர் நகரில் மயானங்களுக்கு (சாதிக்கொரு சுடுகாடாம்!- ஏறத்தாழ 5) மத்தியில், கடந்த 2007-08-ம் ஆண்டில் பொதுக் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டது. ஏற்கெனவே அம்பேத்கர் நகரில் இரு கழிப்பறைகள் இருந்தும், மயானங்களுக்கு வருவோர் மற்றும் கூடுதலாக அம்பேத்கர் நகர் பகுதி மக்களுக்காக இந்தக் கழிப்பறை கட்டப்பட்டது.

என்றாலும், இந்தப் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிப்பது தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. ஏறத்தாழ, திருச்சி மாநகராட்சிப் பகுதி முழுவதும் திறந்தவெளியில் மலம் கழிப்பது தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பகுதி மட்டும் விதிவிலக்காக காட்சியளிக்கிறது.

இந்து மதத்தில் இறந்தவர்களின் சடங்குகள் மயானத்தில் அதிகபட்சம் 3 நாள்களுக்கு நடைபெறும் என்றால், கிறிஸ்தவர்களின் இடுகாட்டில் எப்போதும் சடங்குகள்தான் என்பதை மறுக்க முடியாது. கல்லறைத் திருநாளில், நினைவு நாள்களில் இங்கே கூட்டம் இருக்கும். ஆனால், இப்போதுள்ள திறந்தவெளியில் மலம் கழிக்கும் சூழல் இதற்குச் சாதகமாக இல்லை. மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அத்துடன், மிக விரைவில் இங்கு எரிவாயு மயானத்தையும் அமைக்க (தேவைப்பட்டால் சமூக நல்லிணக்க ஏற்பாடுகளையும் செய்து) மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து அப் பகுதியின் மாமன்ற உறுப்பினர் பெஸ்ட் கே. பாபு கூறியது:

"மயானத்திலுள்ள கழிப்பறையுடன் சேர்த்து அம்பேத்கர் நகரிலுள்ள இரு கழிப்பறைகளை மேம்படுத்த ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகள் முடிந்தவுடன், திறந்தவெளியில் மலம் கழிப்பதன் சுகாதாரக் கேடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார் பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com