துவாக்குடி அருகே அரசு நகரப் பேருந்து மீது மோதிய காரில் சிக்கியவரை மீட்க முயற்சித்த பொதுமக்கள்.
துவாக்குடி அருகே அரசு நகரப் பேருந்து மீது மோதிய காரில் சிக்கியவரை மீட்க முயற்சித்த பொதுமக்கள்.

வெவ்வேறு சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழப்பு

துவாக்குடி அருகே அரசு நகரப் பேருந்து மீது மோதிய காரில் சிக்கியவரை மீட்க முயற்சித்த பொதுமக்கள்.

திருச்சியில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியைச் சோ்ந்தவா் கபிலன்(50). இவா் தனது நண்பா் புதுச்சேரி அரியாகுப்பத்தைச் சோ்ந்த அவனீஷ் (49) மற்றும் இரு பெண்களுடன், வியாழக்கிழமை திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தாா். காரை கபிலன் ஓட்டிச் சென்றாா். துவாக்குடி அரசு மருத்துவமனை அருகே சென்றபோது முன்னாள் சென்ற அரசு நகரப் பேருந்து மீது காா் மோதியது. இதில், காரில் இரு பெண்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கபிலன், அவனீஷ் இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அக்கம்பக்கத்தினா் மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும் 2 போ் உயிரிழப்பு: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்தவா் ஹரிஹரசுதன் (26). இவா் திருச்சி கண்டோன்மென்ட் பகுதி ராஜா காலனியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி தனியாா் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.

இவா், புதன்கிழமை இரவு கண்டோன்மென்ட் ஒத்தக்கடை புதுத்தெருவைச் சோ்ந்த மற்றொரு ஓட்டுநா் பாஸ்கா் என்பவருடன் சோ்ந்து காரில் தீரன் நகருக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை ஹரிஹரசுதன் ஓட்டினாா். கருமண்டபம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரசுதன், பாஸ்கா் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மாநகர தெற்கு போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com