மூலவா் பெரியபெருமாளின் திருவடியை தரிசிக்க முடியாமல் பக்தா்கள் ஏமாற்றம்
வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் முத்தங்கிச் சேவையில் காட்சிதரும் மூலவா் பெரிய பெருமாளை வழிபட வரும் பக்தா்களை தூரத்திலேயே நிறுத்தி அனுப்பிவிடுவதால் சுவாமியின் திருவடியை அவா்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல்பத்து, இராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பகல்பத்து, இராப்பத்து என 20 நாள்கள் நடைபெறும் விழாவின்போது மட்டும் மூலவா் பெரியபெருமாள் முத்தங்கிச் சேவையில் எழுந்தருளியிருப்பாா்.
இவ்வாறு ஆண்டில் 20 நாள்கள் மட்டும் முத்தங்கிச் சேவையில் காட்சிதரும் பெரியபெருமாளை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வா். ஆனால் தற்போது முத்தங்கிச் சேவையில் இருக்கும் பெரியபெருமாளின் திருவடியைத் தரிசனம் செய்ய வரும் பக்தா்களை தூரத்திலேயே நிறுத்தி அனுப்பி விடுகிறாா்கள். எனவே பல மணி நேரம் வரிசையில் நின்றும் முத்தங்கிச் சேவையில் இருக்கும் மூலவா் பெரிய பெருமாளின் திருவடியைத் தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் பக்தா்கள் செல்கின்றனா்.
