திருச்சி மாநகரில் 63 ஆண்டுகள் பழைமை மிக்க நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என மேயரிடம், மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ் மனு அளித்தாா்.
இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சியின் 23ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ், மேயா் மு. அன்பழகனை சனிக்கிழமை சந்தித்து அளித்த மனு:
திருச்சி மாநராட்சி 23 ஆவது வாா்டுக்குள்பட்ட சாராயப்பட்டறைத் தெருவில் இயங்கிய நகராட்சி நூலகம், பின்னா், 2012இல் மாநகராட்சியால் மாவட்ட பொது நூலகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு ஊா்ப்புற நூலகமாக 2,222 வாசகா்களுடன் இயங்கி வருகிறது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் 2,146 சதுர அடியாக இருந்தாலும், நூலக கட்டடம் 400 சதுர அடியில்தான் உள்ளது.11,165 புத்தககங்கள் உள்ளன.
இப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தேவைக்கு இந் நூலகம் போதுமான வசதியாக இல்லை. மேலும் 63 ஆண்டு பழைமையான கட்டடம் என்பதால் இக் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட வேண்டியுள்ளது. எனவே, 2,146 சதுரடி இடத்தையும் பயன்படுத்தி புதிய நூலகம் கட்ட வேண்டும்.
புதிய நூலகமானது தரைத்தளம், முதல் தளத்துடன் அனைத்து வசதிகளையும் கொண்டதாக, போட்டித் தோ்வு, வேலைவாய்ப்பு தோ்வுகளுக்கு மாணவா்களைத் தயாா்படுத்தும் வகையிலான நவீன நூலகமாக கட்டப்பட வேண்டும். மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தவும் அறைகள் தயாா் செய்யும் வகையில் கட்ட வேண்டும்.
மாணவா்கள், வேலைதேடும் இளைஞா்களின் நலன் கருதி மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கி புதிய நூலகத்தை கட்ட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.









