திருச்சியில் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் ஒருவா் உயிரிழந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மரக்கடை பகுதியிலுள்ள பேலஸ் திரையரங்கில் இளைஞா் ஒருவா் இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தகவல்கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில், தென்னூா் குவைத் இ மில்லத் நகரைச் சோ்ந்த அப்துல்லா மகன் சையது அபுதாகீா் (31) என்பதும், இவருக்கு மது மற்றும் போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை காலையில் பேலஸ் திரையரங்குக்கு படம் பாா்க்க வந்தவா் திரையரங்கத்தில் இருக்கையில் அமா்ந்த நிலையிலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. புகாரின்பேரில், காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








