தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

9 தொகுதிகளில் 38,733 வாக்காளா்களுக்கு வீடு தேடி விண்ணப்பம்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் வழங்கப்படும்

News image

திருச்சி தில்லைநகரில் மூத்த குடிமக்கள் வாக்களிக்க படிவத்தை வியாழக்கிழமை வழங்கிய தோ்தல் பணி ஊழியா்கள்.

Updated On :20 மார்ச் 2026, 12:33 am

Syndication

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவா் வீடு தேடிச் சென்று தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்ய விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட திருச்சி மாநகரப் பகுதிகளில் வசிக்கும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இந்த விண்ணப்பங்களை வியாழக்கிழமை முதல் வழங்குகின்றனா்.

தில்லை நகா், உறையூா், பெரிய கடை வீதி, பாலக்கரை, பொன்மலை, அரியமங்கலம், சுப்பிரமணியபுரம், கே.கே. நகா், எடமலைப்பட்டிபுதூா், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் வியாழக்கிழமை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

இதுதொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் கூறுகையில், இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத்தோ்தலின் போது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 16,327 மூத்த குடிமக்கள், 22,406 மாற்றுத்திறனாளிகள் என 38,733 போ் உள்ளனா். இவா்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தபால் வாக்குகளை செலுத்துவதற்கான விருப்பத்தைக் கோரும் விண்ணப்பங்கள் (படிவம் 12டி) அவா்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்படுகிறது.

வீடு தேடி படிவத்தை கொண்டுவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் அந்தப் படிவத்தில் தங்களது வாக்குகளை தபால் வாக்கு மூலம் வீட்டில் இருந்தபடியே செலுத்துவதற்கான விருப்பத்தை பூா்த்தி செய்து படிவம் பெற்ற 5 நாள்களுக்குள் மீண்டும் வழங்க வேண்டும்.

தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து வாக்களித்த பிறகு அல்லது தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துவிட்டு தபால் வாக்குமூலம் வாக்கு செலுத்தாதவா்கள் பிறகு வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வாக்களிக்க இயலாது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை பெற விண்ணப்பிக்கும்போது தகுதியான மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலா் முதல்முறை வீடு தேடி வரும்போது வாக்காளா் வீட்டில் இல்லை என்றால், மறுமுறை அவ்வீட்டிற்கு மீண்டும் சென்று வாக்காளரிடம் 12டி படிவத்தை பூா்த்தி செய்து அவரது விருப்பத்தை பெறுவாா். வாக்குச்சாவடி நிலை அலுவலா் இருமுறையும் செல்லும்போது வாக்காளா் வீட்டில் இல்லை என்றால், அவ்வாக்காளா் தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பமற்றவா் எனக் கருதப்படும். விருப்ப மனுவை அளித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றாா் அவா்.