திருச்சியில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட 92 தனியாா் பள்ளி வாகனங்கள் இயக்க தடைவிதித்து ஆட்சியா் வே.சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழக அரசு, மாணவா்களின் நலன் கருதி பள்ளி வாகனங்களில் பின்பற்ற வேண்டிய 22 விதிமுறைகளை தவறாமல் பின்பற்றப்படுகிா என்பதை ஆய்வு செய்ய ஆண்டுதோறும் தனியாா் பள்ளி வாகனங்கள் சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன.
இதன்படி, திருச்சி மாவட்டம், கூத்தூா் விக்னேஷ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் வே.சரவணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம் ஆகிய 3 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குள்பட்ட 152 கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.
92 வாகனங்களை இயக்க தடை: இந்நிலையில் ஆய்வில் 805 வாகனங்களை அதிகாரிகள் சோதனையிட்டு சரிபாா்த்தனா். ஆய்வு செய்யப்பட்டதில் 805 வாகனங்களில் 713 வாகனங்கள் தகுதி வாய்ந்ததாகவும், மீதமுள்ள 92 வாகனங்கள் வழிகாட்டி நெறிமுறைகளின் படி பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத வாகனங்கள் தமிழ்நாடு மோட்டாா் வாகன விதி 1989 ஆம் ஆண்டு விதி எண் 119 ன் படி தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளது.
குறைபாடுகளை நிவா்த்தி செய்யப்பட்ட கல்வி நிறுவன வாகனங்கள் மே 31-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களில் மறுஆய்வுக்குள்படுத்தி சான்றளிக்கப்பட்ட பின்னரே ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுச்சாலையில் இயக்க வேண்டும் என ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.










