அரியலூர் ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சியில் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, 909 பயனாளிகளுக்கு ரூ. 37,57,807 மதிப்பில் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை வழங்கி அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுரை. மணிவேல் பேசியது:
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மாணவ, மாணவிகளின் கல்விக்காக ரூ. 14,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், புத்தகம், கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகிறது.
பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பெண்கள் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படுவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலை உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள பயனாளிகள் அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகளை பெற்று தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கணபதி, வட்டாட்சியர் முருகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அன்பழகன், பெரியதிருக்கோணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வை.கோ. சிவப்பெருமாள், அரியலூர் ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊராட்சித் தலைவர் பாலுசாமி வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









