நிகழாண்டில் தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி 148 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்றார் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.
வேளாண் துறை, கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள சோழமாதேவி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வேளாண் திருவிழா தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
விவசாயிகளின் உற்பத்தியை இரண்டு மடங்காகவும், வருமானத்தை மும்மடங்காக ஆக்கவும் தமிழக அரசு பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளாக கிரிஷி கர்மன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து வேளாண் துறை பெற்றுள்ளது. தற்போது மக்கள் தொகைக்கு ஏற்ப, தேவையான நஞ்சில்லா தரமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேளாண் துறை பல்வேறு தொழில்நுட்பங்களையும் மற்றும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகள் பயிர் சாகுபடியோடு கால்நடை பராமரிப்பு, மீன், காளான், பட்டுப்புழு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஒருங்கிணைந்து கடைப்பிடித்தால் அதிக லாபம் பெறலாம் என்றார் அவர்.
முன்னதாக விவசாய உபயோகப்பொருள்கள் அடங்கிய கண்காட்சியையும் கொறடா பார்வையிட்டார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக்கலைத் துறை இயக்குநர் அன்புராஜன், திருச்சி ஆவின் துணைத் தலைவர் பிச்சமுத்து உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.