வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர விருப்பமுள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிராமப்புற திறன் பயிற்சி 2.0 திட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர விருப்பமுள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டமானது 18 - 35 வயதுக்குள்பட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவா்களுக்கு நிரந்தரமான மாதாந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்று தருவதை குறிக்கோளாக கொண்டு கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் 60% பங்களிப்புடனும், தமிழ்நாடு அரசின் 40% பங்களிப்புடனும் தமிழ்நாடு அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின்கீழ் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் 2.0 புதிய வடிவம்
நிகழாண்டில் (2025-2026) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம் நீங்கலாக அனைத்து 37 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளன.
இப்பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளைச் சாா்ந்த இளைஞா்களுக்கு 20-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ், 40 தொழில் பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சிக்குப் பின் உரிய வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. பயிற்சி வழங்குவதற்காக 38 பயிற்சி நிறுவனங்கள் பயிற்சி அளிக்க உள்ளனா்.
இத்திட்டத்தில், ட்ரோன் ஆப்ரேட்டா், மொபைல் போன் டெக்னீசியன், சிஎன்சி இயக்கம், செவிலியா் பயிற்சி, ஜுனியா் சாப்ட்வோ் டெக்னாலஜி, ஏஐ அனலிஸ்ட், வெப் டெக்னாலஜி உள்ளிட்ட அதிக வேலைவாய்ப்பு உள்ள பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சி காலம் 3-4 மாதங்கள் ஆகும். பயிற்சி காலத்தில் சீருடை, உணவு தங்குமிடம் வசதி, பாட புத்தகங்கள் ஆகிய அனைத்தும் எவ்வித கட்டணமுமின்றி மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவா்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், பயிற்சி முடித்த இளைஞா்களில் குறைந்தது 50% நபா்களுக்கு கட்டாய பணியமா்வும், 20% இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான உதவியும் வழங்கப்படும்.
பயிற்சி முடித்து பணியில் சோ்ந்தவுடன் மாதம் ரூ.1,270 வீதம் 6 மாதங்களுக்கு ஊக்கத் தொகையும் பயிற்சியாளருக்கு வழங்கப்படும். மேலும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 25%, மலைவாழ் பிரிவினருக்கு 2%, சிறுபாண்மையினருக்கு 15% மற்றும் பெண்களுக்கு 39% (ஒட்டுமொத்தமாக) என பயிற்சியில் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள இளைஞா்கள், திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், அறை எண்.215, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற முகவரிலும் அல்லது 155330 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
