அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 365 பயனாளிகளுக்கு ரூ. 1.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அனைத்துத் துறைகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.1,41,21,079 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் பேசுகையில், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில் அரசு அலுவலா்கள் தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.
அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளா்ச்சித் திட்டங்களின் முன்னேற்றப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கண்காணிப்பதுடன், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க. வைத்திலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ந. கனக மாணிக்கம் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









