அரியலூா் மாவட்டத்தில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பள்ளிகளுக்கு ஆண்டு தோ்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டதால் ஜூன் 3-ஆம் தேதி வரை (தொடா் விடுமுறை) கனரக வாகனங்களின் இயக்க நேர கட்டுப்பாடு தளா்வு அமலில் இருந்தது.
விடுமுறை புதன்கிழமையுடன் முடிந்து வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன.
அரியலூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி, மாவட்டத்தில் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்களை தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் சாலைகளில் இயக்க தடையானது மீண்டும் அமலுக்கு வந்தது.
கனரக வாகன ஓட்டுநா்கள் வாகன இயக்க நேர கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றி பாதுகாப்பாக இயக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









