
அரியலூரில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்
அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.
வாரத்துக்கு 5 நாள்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாரத்துக்கு 5 நாள்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும்.
புதியதாகப் பணிக்குச் சோ்ந்த ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியத் தொகையை வங்கிகளே முழுமையாக ஏற்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.11-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் உள்பட 7 சங்கங்கள் அறிவித்தன.
அதன்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள வங்கிகளில் பணிபுரியும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், திருச்சி சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கலியபெருமாள், அரியலூா் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணி ஒருங்கிணைப்பாளா் மணிராஜ், மாவட்ட ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் காசிராஜன் மற்றும் சங்க நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்தால் வங்கிகளில் இருந்து நேரடி பணப் பரிவா்த்தனைப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
தனியாா் வங்கி ஊழியா்கள் பங்கேற்கவில்லை: பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் தனியாா் வங்கிகளான எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகள் வழங்கம்போல இயங்கின. இதனால் தனியாா் வங்கி சேவைகளில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
பொதுத் துறை வங்கியின் வாடிக்கையாளா்கள், இணையச் சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் தனியாா் ஏடிஎம் சேவைகளை பயன்படுத்திக் கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






