கரூர் மாவட்டத்தில் படித்த முதல் தலைமுறை தொழில்முனைவோர் புதிய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நீட்ஸ் திட்டத்தின்கீழ் படித்த முதல் தலைமுறை தொழில்முனைவோர் 2013-14 -ம் நிதியாண்டில் தொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்பட்டு தகுதிவாய்ந்த தொழில் திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத் தரப்படும். இந்தத் திட்டத்தை மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் இணைந்து செயல்படுத்துகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை திட்ட மதிப்பீடு உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களை தொடங்கலாம். இதற்காக தமிழக அரசு 25 சதவீத மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்குகிறது.
இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35 ஆகும். இதர சிறப்பு பிரிவினருக்கு (மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள்) அதிகபட்ச வயது 45.
இந்தத் திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐடிஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனம் மூலம் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் பங்களிப்பு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம், மகளிருக்கு 50 சதவீதம், இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (மேற்கண்ட தகுதிகளுடன் உள்ள ஆதரவற்ற, கைவிடப்பட்ட மகளிருக்கு முன்னுரிமை உண்டு).
புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும். தொழில் தொடங் நிலம் வாங்குதல், பங்குதாரர் பத்திரம் செய்தல், தொழில் பதிவு, வங்கிக் கடன் விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளும் இந்தத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட நாளான 29-10-12 -க்கு பிறகு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அரசாணை, விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட தொழில் மைய வலைதளமான ஜ்ஜ்ஜ்.க்ண்ஸ்ரீந்ழ்ழ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஒரு மாத மேலாண் பயிற்சி ரூ. 3 ஆயிரம் உதவித் தொகையுடன் வழங்கப்படும். கடந்த நிதியாண்டில் 10 பேருக்கு ரூ. 1.73 கோடி மானியத்துடன் மேலாண் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டு கரூர் மாவட்டத்துக்கு 19 பேருக்கு ரூ. 1.90 கோடி மானியத் தொகை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான தொழில்முனைவோர் மேலும் விவரங்கள் பெற ஜவகர் பஜாரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தொடர்பு கொண்டு அறியலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








