கரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் 643 பேர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
14 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கம் வேண்டும் எனச் சட்டம் உள்ளது.
இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகளும், பள்ளி இடை நின்ற குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தக் குழந்தைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வீடு வாரியாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகள் கண்டறியப்படுகின்றனர்.
கணக்கெடுப்பின்போது மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படுகின்றன.
கண்டறியப்படும் பள்ளிச் செல்லா குழந்தைகள் உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு அனைத்துப் பாட உபகரணங்கள், சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் அனைவருக்கும் கல்வி இயக்க நிதி அளிக்கப்படுகிறது.
நிகழாண்டில் கரூர் மாவட்டத்தில் கடந்த ஏப். 10 முதல் 30-ம் தேதி வரை பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் 966 ஆசிரியர் பயிற்றுநர்கள், 444 சிறப்பாசிரியர்கள் என மொத்தம் 1,498 பேர் கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.
இவர்கள் குழந்தையின் வயது, பள்ளி செல்லாததன் காரணம், உடல், மனதளவிலான பாதிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தனர்.
இதில் கரூரில் 101, தாந்தோனியில் 39, அரவக்குறிச்சியில் 61, பரமத்தில் 50, கிருஷ்ணராயபுரம் 131, கடவூரில் 117, குளித்தலையில் 100, தோகைமலையில் 35 என மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் மொத்தம் 634 பேர் பள்ளி செல்லாத, பள்ளி இடைநின்றவர்கள் எனத் தெரியவந்தது.
இவர்களை பள்ளிச் செல்லா குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி, அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கைகளை அனைவருக்கும் கல்வி இயக்கம் எடுத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








