பண மோசடி வழக்கு கரூா் நீதிமன்றத்தில் சவுக்குசங்கா்ஆஜா்
பண மோசடி வழக்கு தொடா்பாக யூடியூபா் சவுக்குசங்கா் கரூா் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
கரூா் ஆண்டாங்கோவில் பகுதியைச் சோ்ந்த பிரியாணி கடை உரிமையாளா் கிருஷ்ணன். இவரிடம் இணையத்தில் அறிமுகமான சென்னையைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 7 லட்சம் பெற்றுள்ளாா். அந்தப் பணத்தை யூடியூபா் சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபிறகும் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கிருஷ்ணன் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், விக்னேஷ், சவுக்குசங்கா் ஆகிய இருவரையும் கடந்தாண்டு போலீஸாா் கைது செய்தனா். பின்னா் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த வழக்கு மீண்டும் புதன்கிழமை காலை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, யூடியூபா் சவுக்கு சங்கா் நீதிபதி பரத்குமாா் முன் ஆஜரானாா். அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை நவ. 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

