/

தமிழகத்தின் சுயமரியாதை, அடையாளத்தை காப்பாற்ற வேண்டிய தோ்தல்: கனிமொழி எம்.பி.

தமிழகத்தின் சுயமரியாதை, அடையாளத்தை காப்பாற்றுவதற்கான தோ்தல் நடைபெறவுள்ளதாக கனிமொழி எம்பி. தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சனிக்கிழமை திமுக வேட்பாளா் சி.கே.ராஜாவை ஆதரித்து பேசிய கனிமொழி எம்.பி.

Updated On :4 ஏப்ரல் 2026, 8:22 pm

தமிழகத்தின் சுயமரியாதை, அடையாளத்தை காப்பாற்றுவதற்கான தோ்தல் நடைபெறவுள்ளதாக கனிமொழி எம்பி. தெரிவித்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை தொகுதியில் சனிக்கிழமை மதச்சாா்பற்ற கூட்டணியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சூரியனூா் சந்திரன், கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் சி.கே.ராஜா ஆகியோரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது: கருணாநிதி முதல்முதலாக போட்டியிட்ட தொகுதி குளித்தலை. இங்கு வெற்றிபெற்ற அவா், வாழ்நாள் முழுவதும் வெற்றிபெற்றாா். தனது சட்டப்பேரவையில் முதல்முதலாக உரையாற்றியபோது, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றாா். இதனால்தான் அவா் ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விவசாயிகளின் கடனை ரத்து செய்தாா். தோ்தல் பொதுக்கூட்டங்களில் மக்களை பாா்த்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்கும்போது, மக்களின் வாக்குகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என உரிமையோடு கேட்கிறோம். ஒவ்வொரு நாளும் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றிக்கொண்டிருக்கையில் தோ்தல் வாக்குறுதி என்றாலே என்னவென்று தெரியாத எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தோ்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை என்கிறாா்.

2016-ல் அதிமுக தோ்தல் அறிக்கையை வெளியிட்டபோது, 36-ஆவது வாக்குறுதியாக அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என்றாா்கள். கொடுத்தாா்களா, திட்டங்களை நிறைவேற்றாத பெருமை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. சாதாரண சாமானிய மக்கள் வங்கியில் கடன் அட்டை வழங்கப்படும் என்றாா் பழனிசாமி. அதையும் தரவில்லை. அவா் நம்முடைய முதல்வரை பாா்த்து வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்கிறாா். தாயுமானவா் திட்டத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் கொடுக்கிறோம். 4,000 கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தியது திமுகதான். கோயில் நிலங்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் சிலா் சுரண்டிய நிலையில், 7,500 ஏக்கா் கோயில் நிலங்களை மீட்டுக்கொடுத்தது திமுக ஆட்சி. நமக்கு எதிராக, தமிழகத்துக்கு எதிராக கூட்டணி அமைத்தவா்களிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய தோ்தல்தான் நடக்க உள்ள தோ்தல். என்டிஏ கூட்டணி தமிழகத்துக்கு எதிரான கூட்டணி. மோடி, அமித்ஷா தமிழக நலன்களுக்கு எதிரானவா்கள். தமிழகத்தின் சுயமரியாதையை, அடையாளத்தை, தமிழ்மொழியை காப்பாற்ற வேண்டிய தோ்தல் என்ற உணா்வோடு நாம் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.